search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துணவு முட்டை"

    சத்துணவு முட்டை சாப்பிட்ட மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே நாகமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகள் 215 பேருக்கு நேற்று மதியம் சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது.

    இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 5-ம் வகுப்பு மாணவர்கள் ராஜா, அஜய், சிவராஜ், மாணவிகள் திவ்யா, காவியா, கீதா, சரண்யா, ரஞ்சனி, கார்த்திகா, கீதாகுமாரி, பவித்ரா, சவுமியா, தேவிகா, தீபிகா ஆகிய 14 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விளாங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், கெட்டுப்போன முட்டையை மாணவ, மாணவிகள் சாப்பிட்டதால், அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறினர். பின்னர்  அவர்களை மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    அரக்கோணம் அருகே திருத்தணியில் இருந்து கொண்டு வரப்பட்ட சத்துணவு முட்டை விற்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே காவனூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் சத்துணவு முட்டை விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து வேலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிச்சாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, மேலாளர் சாந்தி ஆகியோர் நரசிங்கபுரம் பகுதியில் நேரடியாக சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    பொதுமக்கள் எங்கள் பகுதியில் மூதாட்டி ஒருவர் முட்டை விற்பதாக தெரிவித்தனர். அந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தியபோது நான் முட்டை விற்கவில்லை என்றார். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தாழவேடு கிராமத்தில் இருந்து சிலர் சத்துணவு முட்டைகளை வாங்கி வந்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

    இதுகுறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிச்சாண்டி கூறியதாவது:-

    அரக்கோணம் அருகே கிராமங்களில் சத்துணவு முட்டை விற்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். அரக்கோணம் தாலுகா பகுதியில் இருந்து சத்துணவு முட்டை எதுவும் விற்கப்படவில்லை.

    திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்துதான் சத்துணவு முட்டைகளை சிலர் வாங்கி வந்து விற்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள 81 சத்துணவு மையங்கள், நகராட்சியில் உள்ள 10 மையங்களில் சத்துணவு முட்டை இருப்பு விவரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அறிக்கையில் சத்துணவு முட்டை இருப்பில் தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் அரக்கோணம் பகுதியில் சத்துணவு முட்டையை யாராவது கொண்டு வந்து விற்பனை செய்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #tamilnews
    சத்துணவு முட்டை வினியோகத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீடு உள்ளிட்ட 76 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    சென்னை:

    சத்துணவு முட்டை வினியோகத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட நகரங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீடு உள்ளிட்ட 76 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் முட்டை வினியோகிக்கும் பொறுப்பை காண்டிராக்ட் எடுத்து அந்தந்த மாவட்டங்களுக்கு தேவைக்கு ஏற்ப முட்டைகளை வழங்கி வருகிறது.

    இந்த நிறுவனம், அரசு நிர்ணயித்த முட்டையை விட, ‘புல்லட்’ எனப்படும் எடை மற்றும் தரம் குறைந்த முட்டைகளை வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு வழங்குவதாக தெரியவந்தது. இதனால் மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், முட்டை வினியோகத்தில் முறைகேடு செய்யும் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் புகார் எழுந்தது.

    அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு ஆகியவற்றை வினியோகம் செய்யும் நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் தனியார் சத்து மாவு தயாரிக்கும் நிறுவனத்தை வருமானவரித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    போலியான நிறுவனங்கள் மூலம் முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு போன்றவற்றை அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வினியோகம் செய்தது போன்று போலி கணக்குகள் தயாரித்து, பல கோடி ரூபாய் முறைகேடு செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து, ‘கிருஷ்டி பிரைடு கிராம்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த நிறுவனம் அரசு பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு ஆகிய உணவுப் பொருட்களை அனுப்பி வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தொடர்ந்து புகார் வந்ததால் அதன் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.

    சென்னை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, கோவை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் கிருஷ்டி பிரைடு கிராம் நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    சென்னையில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், தியாகராயநகர், தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் உள்ளன. அங்கு வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மயிலாப்பூரில் வடக்கு மாடவீதியில் உள்ள அக்னி எஸ்டேட்ஸ் மற்றும் பவுண்டேசன் நிறுவனத்தில் வருமானவரித்துறையைச் சேர்ந்த 10 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த நிறுவனங்களின் அறங்காவலர் ஜெயப்பிரகாஷ், உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் குமாரசாமி ஆகியோரின் வீடுகள் கோட்டூர்புரம், திருவான்மியூர் ஆகிய இடங்களில் உள்ளன. அங்கும் சோதனை நடத்தப்பட்டது.

    சென்னையை அடுத்த நெற்குன்றத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நிர்வாக அலுவலர் எம்.சுதாதேவி ஐ.ஏ.எஸ். வீட்டிலும் சோதனை நடந்தது.

    திருச்செங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் மட்டும் இன்றி அதிகாரிகள் குடியிருப்பு, குடோன்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மோர்பாளையத்தில் உள்ள அந்த மாவு நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, திருச்செங்கோடு அருகே விட்டம்பாளையத்தில் உள்ள அவரது உறவினர் வீடு, திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியில் உள்ள அவரது உறவினர் வீடு மற்றும் ராசிபுரம் பகுதியில் உடுப்பத்தான்புதூர் மற்றும் புதுச்சத்திரம் பகுதிகளில் உள்ள சத்துமாவு நிறுவனம் மற்றும் கிளை அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    நாமக்கல் வேப்பநத்தம் பகுதியில் உள்ள முட்டை குடோன்களிலும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    பல்வேறு இடங்களிலும் நடந்த சோதனையில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    இந்த சோதனை குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு போன்றவற்றை கடந்த சில ஆண்டுகளாக வினியோகம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளன. இதனை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், தற்போது சென்னை, கோவை, நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 76 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டோம்.

    இந்த சோதனையின் போது ரொக்கப் பணமும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஆய்வுக்கு பின்னர்தான் ரொக்கம் மற்றும் ஆவணங்களின் துல்லியமான மதிப்பு எவ்வளவு என்று தெரியவரும். இந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையில் இறங்க உள்ளோம். வரிஏய்ப்பு செய்தது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். 
    ஸ்ரீவில்லிபுத்தூரில், சத்துணவுடன் வழங்கப்படும் முட்டைகள் மாணவர்களுக்கு சீராக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவுடன் தினமும் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இவை மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளைச்சாமி, மம்சாபுரம், வன்னியம் பட்டி பகுதிகளில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்தார். மேலும் பழுதடைந்த சத்துணவுக் கூடங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் கூறுகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் சில நாட்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முட்டை விநியோகம் குறித்த எந்த புகாரும் இதுவரை எழவில்லை என்றார்.

    ×